அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

June 27, 2015

2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

(2015 ரமளான் கடிதம் 3ஐ படிக்க இங்கு சொடுக்கவும்)

அன்புள்ள தம்பிக்கு,

உன் அண்ணன் உமரின் வாழ்த்துதல்கள்.

உன் முந்தையை கடிதத்தில் ஒரு சவாலை என் முன் வைத்தாய். உண்மை இஸ்லாமை
காணவேண்டுமென்றால், தற்கால முஸ்லிம்களிடமல்ல, ஆரம்ப கால முஸ்லிம்களிடம்
தான் காணமுடியும் என்று சவால் விட்டாய். உன் சவாலுக்கு பதில் அளிக்கும்
படி, நான் இஸ்லாமின் மீது மூன்று விமர்சனங்களை முன் வைக்கிறேன்.

1. இன்று நாம் காண்கின்ற வன்முறைகளுக்கெல்லாம் காரணம் இஸ்லாமிய இறையியல்
கோட்பாடுகள் தான்.

2. இஸ்லாம் மக்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதில்லை..

3. இஸ்லாமின் ஆரம்பகால முஸ்லிம்களும் மனமாற்றமடையாமலேயே இருந்தனர்.

மேற்கண்ட தலைப்புகளுக்குள்ளேயே என்னுடைய அடுத்தடுத்த கடிதங்களும்
எழுதப்படும். உனக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு ஆகும், அதாவது
இஸ்லாமின் மீதுள்ள குற்றச்சாட்டுகளை துடைத்தெரிய மேற்கண்ட தலைப்புக்களை
விமர்சித்து, நீ இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நான் முஹம்மதுவைப் பற்றி அனேக விமர்சனங்களை
உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். இந்த ஆண்டு, நீ கேட்டுக்கொண்டதற்கு
இணங்க, அவருடைய தோழர்கள் மற்றும் குடும்ப நபர்கள் பற்றிய விவரங்களை
உனக்கு முன்பாக வைக்கப்போகிறேன். உண்மையாகவே, நாம் இஸ்லாமை அதன் நிஜ
வடியில் காணவேண்டுமென்றால் அதனை முஹம்மதுவின் வாழ்விலும், அடுத்தபடியாக
அவரது நெருங்கிய நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் வாழ்விலும்
காணலாம். எனவே, இந்த கடிதத்தை முஹம்மதுவின் அன்பான மகள் ஃபாத்திமாவை
எப்படி இஸ்லாம் மாற்றியிருந்தது என்பதைப் பற்றி பார்க்கப்போகிறோம்.

நாம் ஃபாத்திமாவைப் பற்றி பார்ப்பதற்கு முன்பாக, முஹம்மது சொன்ன ஒரு
முக்கியமான விஷயத்தைப் பற்றிய ஹதீஸை படிப்போமா! முஸ்லிம்கள் சஹீஹ் என்று
நம்புகின்ற புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஒரு ஹதீஸ்:

ஸஹி புகாரி ஹதீஸ் - பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1344

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

. . . நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால்
நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை.
ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே
பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்.

ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

ஃபாத்திமா முஹம்மதுவிற்கு அன்பான மகள். உலகத்துக்கே வழிகாட்டியாக வந்த
முஹம்மதுவின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக பிறப்பது என்பது சும்மாவா?
இது மிகப்பெரிய பாக்கியமல்லவா? ஃபாத்திமாவின் மேன்மை கொஞ்சம் நஞ்சமல்ல.
முஸ்லிம்கள் ஃபாத்திமா அவர்களைப் பற்றி ஆஹா! ஓஹோ! என்று பேசுவார்கள்.
அவர்களின் குணநலன்கள் பற்றி பெருமையாக பேசிக்கொள்வார்கள். நாம் இந்த
கடிதத்தில், முஹம்மது மரித்த பிறகு, ஃபாத்திமா எப்படி நடந்துக்கொண்டார்
என்பதை புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்தும், இதர இஸ்லாமிய ஆரம்ப
கால சரித்திர நூல்களிலிருந்தும் காண்போம். இஸ்லாம் ஃபாத்திமாவை
எப்படிப்பட்ட நபராக மாற்றியிருந்தது என்பதை பார்க்க தம்பி, உன்னை
அன்புடன் அழைக்கிறேன். இதனை கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம்.

1) முஹம்மதுவின் மரணம் மற்றும் அபூ பக்கரின் தலைமைத்துவம்

2) தந்தை மரித்த அடுத்த நாள் – அபூபக்கரிடம் ஃபாத்திமா வைத்த வேண்டுகோள்

3) சாகும் வரை உன்னோடு பேசமாட்டேன், நான் செத்தாலும் என் சடலத்தைக் காண
வரக்கூடாது. இஸ்லாம் சந்தித்த முதல் தோல்வி – ஃபாத்திமா

4) ஃபாத்திமாவின் நற்பண்புகள் எங்கே போனது?

5) இஸ்லாம் மனிதர்களை மனதளவில் மாற்றுகிறதா?

6) ஃபாத்திமாவும் இயேசுவின் போதனைகளும்

7) முடிவுரை

________________________________

1) முஹம்மதுவின் மரணம் மற்றும் அபூ பக்கரின் தலைமைத்துவம்

முஹம்மது திடீரென்று மரித்துவிடுகின்றார். தனக்கு பிறகு இஸ்லாமிய அரசை
தலைமையேற்று நடத்துபவர் யார் என்று அவர் சொல்லாமலேயே மரித்துவிட்டார்.
அவருக்கு தோழர்கள் அனேகர் இருந்தனர், அவர்களில் யாரை கலிஃபாவாக
(தலைவராக) நியமிப்பது? முஹம்மதுவின் தோழர்களுக்கிடையே அனேக
வாக்குவாதங்கள் நடந்தன. உமர் தைரியம் கொண்டு, தன்னுடைய ஆதரவு அபூ
பக்கருக்கு என்றுச் சொல்லி, அபூ பக்கர் தான் அடுத்த தலைவர் என்று
பிரகடனம் செய்தார். இதனை சிலர் விரும்பவில்லை, இருந்த போதிலும், கடைசியாக
எல்லாரும் ஒப்புக்கொண்டனர். சிலர் விரும்பி ஆதரவு அளித்தனர், விரும்பாமல்
சிலர் ஆதரவு அளித்தனர். இந்த நிகழ்ச்சி பற்றிய ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய
ஆதாரங்களை தேவைப்படும் போது தருகிறேன். இக்கட்டுரைக்கு இதுவே போதும்.

2) தந்தை மரித்த அடுத்த நாள் – அபூபக்கரிடம் ஃபாத்திமா வைத்த வேண்டுகோள்

முஹம்மது மரித்தார், அவரை அடக்கம் செய்தார்கள், அடுத்த தலைவராக அபூ
பக்கரையும் நியமித்துவிட்டார்கள். முஹம்மதுவின் மரணத்திற்கு அடுத்த நாள்
முஹம்மதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவர் அலியும் மற்றும் இப்னு
அப்பாஸ் ஆகியோர் மூன்று பேரும் அபூ பக்கரை சந்தித்து, முஹம்மதுவுடைய
ஆஸ்தியிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய பங்குகளை கொடுத்து விடுமாறு
கோரினர்.

இந்த கடிதத்தில் ஃபாத்திமா பற்றிய விவரங்களை மட்டுமே நாம் காண்போம்.

புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஆதாரங்கள்:

4035. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஃபாத்திமா(ரலி) அவர்களும், அப்பாஸ்(ரலி) அவர்களும் 'ஃபதக்' கிலிருந்த
நபி(ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி(ஸல்) அவர்களின்
(குமுஸ்) பங்கையும்தங்களின் வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூ
பக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர். Volume :4 Book :64

4240. & 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) (நபியவர்களின் மறைவுக்குப்
பிறகு, கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர்(ஸல்)
அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக்
சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில்
மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.
அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ('நபிமார்களான) எங்கள்
சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச்
செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே
முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்' என்று
சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு
மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் எந்த
நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும்.
அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்கள்
செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்" என்று (ஃபாத்திமா அவர்களுக்கு)
பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும்
ஒப்படைக்க அபூ பக்ர்(ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர்(ரலி)
மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா(ரலி)
பேசவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா(ரலி)
உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா(ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர்
அலீ(ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்
கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது
அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை.
அலீ(ரலி) அவர்களே ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை
நடத்தினார்கள். . . . . . .

இந்த நிகழ்ச்சி பற்றி ஸஹீஹ் முஸ்லிமிலும், கிதாப் அல் தபாகத் அல் கதீர்
நூலிலும் இதர ஹதீஸ் தொகுப்புகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகளை
அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: இஸ்லாமின் அரச குடும்பம் – முஹம்மதுவின்
ஆஸ்தி

3) சாகும் வரை உன்னோடு பேசமாட்டேன், நான் செத்தாலும் என் சடலத்தைக் காண
வரக்கூடாது. இஸ்லாம் சந்தித்த முதல் தோல்வி – ஃபாத்திமா

மேலே கண்ட விவரங்களின் படி, ஃபாத்திமா அவர்கள் அபூ பக்கரிடம் தனக்கு
வரவேண்டிய ஆஸ்தியை தரும் படி கேட்டார்கள், முஹம்மதுவின் விருப்பத்தின்
படி, அபூ பக்கர் மறுத்துவிட்டார். இதனால், ஃபாத்திமா அபூ பக்கர் மீது
கோபம் கொண்டு தாம் மரிக்கும் வரையில் பேசவில்லை. தான் மரித்தால் கூட
இரகசியமாக அடக்கம் செய்யும் படி அலியிடம் கேட்டுக்கொண்டார். கணவரும் அபூ
பக்கருக்கு தெரிவிக்காமல், அடக்கமும் செய்துவிட்டார்.

உலக மகா தீர்த்தகரிசி முஹம்மதுவின் மகள் ஃபாத்திமாவின் செயலைக் கண்டாயா
தம்பி. உலக பொருட்களுக்காக ஃபாத்திமாவின் செயல் ஒரு முஸ்லிம்
செய்யக்கூடிய செயலா? ஃபாத்திமாவை நாம் ஒரு எடுத்துக்காட்டாக, நற்குண
ஸ்திரியாக கருதமுடியுமா? இஸ்லாமிய இறையியல் இவரை ஏன் மாற்றக்கூடாமல்
தோற்றுவிட்டது.

மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருத்தல் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதன்று.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல்
இருக்கக்கூடாது. இது இஸ்லாமில் அனுமதிக்கப்படாது. புகாரி மற்றும்
முஸ்லிம் ஹதீஸ்களில் இதைப் பற்றி முஹம்மது சொன்ன விவரங்களைக் காண்போம்.
அப்பாவின் வார்த்தைகளை தப்பாமல் தவறிவிட்ட மகள் ஃபாத்திமா ஆவார்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்கள்:

புகாரி 6065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக்
கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்)
சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று
நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என அனஸ் இப்னு
மாலிக்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78

புகாரி 6076. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக்
கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்)
சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு)
மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78

புகாரி 6077. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல்
பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து
ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு
செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில்
சிறந்தவராவார். என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். Volume :6
Book :78

முஸ்லிம் 5001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக்
கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்)
சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு)
மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான)
செயலன்று.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் 5003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று
நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள்
இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும்
முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில்
சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ
அவர்தான்.

முஸ்லிம் 5004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல்
இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். Book :45



4) ஃபாத்திமாவின் நற்பண்புகள் எங்கே போனது?

ஃபாத்திமா அவர்கள் அனேக நற்பண்புகள் கொண்டு திகழ்ந்தார்கள் என்று நீ
என்னிடம் சொல்லக்கூடும். ஆம், அவருக்கு அனேக நற்பண்புகள் இருந்தன என்பது
உண்மை தான், ஆனால், எல்லா நற்பண்புகளுக்கும் சாவு மணி அடித்துள்ளது,
அவரிடம் வெளிப்பட்ட பண ஆசை என்ற அந்த ஒரே ஒரு தீய குணம்.

அ) இயேசுவின் தாய் மரியாளோடு ஒப்பிடப்பட்ட ஃபாத்திமா

இயேசுவின் தாய் மரியாள் அவர்கள் சொன்னதுபோலவே, ஃபாத்திமாவும் "அல்லாஹ்,
தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்"என்று கூறினார்களாம், மேலும்
தனக்கு பசியாக இருந்தாலும், கிடைத்த உணவை முஹம்மதுவிற்கு
கொடுத்தார்களாம். இந்த நற்குணத்தை முஹம்மது மெச்சிக்கொண்டார் என்று இந்த
தளங்களில் எழுதப்பட்டுள்ளது:
http://sahaabaakkal.blogspot.in/2011/10/blog-post_21.html
&http://mfathima.blogspot.in/2013_03_01_archive.html .

இந்த நற்குணத்தினால் என்ன பயனுண்டு? தன் தந்தை பசியாக இருந்ததால்,
ஃபாத்திமா தன் பசியையும், பார்க்காமல் கொடுத்தார்கள். இதில் என்ன
ஆச்சரியம் இருக்கிறது. மேலும், முஹம்மது ஒரு நபியாக இருக்கிறார் என்று
ஃபாத்திமா நம்பினதால், அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். இதனை ஒரு
நற்பன்பாக நாம் கருதினாலும், அதிக உலக பொருட்கள் தனக்குகிடைக்காமல் போனதே
என்ற கோபத்தால், கலிஃபாவை கனவீனப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்?

ஆ) இஸ்லாமிய சமுதாய பெண்களுக்கு தலைவியாக திகழுவார், முஹம்மதுவிற்கு
பிறகு முதலாவது மரிப்பவர் என்று முன்னறிவிக்கப்பட்ட ஃபாத்திமா

ஸஹீஹ் முஸ்லிம் எண் 4844, மற்றும் 4845ன் படி, ஃபாத்திமா முஸ்லிம் சமுதாய
பெண்களுக்கு தலைவியாக திகழுவார், மற்றும் முஹம்மதுவிற்கு பிறகு முதலாவது
மரிப்பவர் ஃபாத்திமா ஆவார்.

ஆனால், என் அருமை தம்பியே, முஸ்லிம் சமுதாய தலைவியா இப்படி உலக
பொருட்களுக்காக கீழ்தரமாக நடந்துக்கொள்வார்? கலிஃபாவை புறக்கணிப்பார்,
அவரோடு பேசமாட்டார்? மூன்று நாட்கள் அல்ல, ஆறு மாதங்கள் கசப்பை மனதில்
வைத்திருந்து மரித்தார்.

இதிலிருந்து அறிவது என்னவென்றால், ஃபாத்திமா எதிர் காலத்தில் என்ன
செய்யப்போகிறார் என்று முஹம்மதுவிற்கு தெரியவில்லை (அல்லது
அல்லாஹ்விற்கும் தெரியவில்லை). தலைவியை மாற்ற இஸ்லாமினால் முடியவில்லையே,
தொண்டர்களை எப்படி இஸ்லாம் மாற்றப்போகிறது?

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முஹம்மதுவிற்கு பிறகு
தாம் மரிக்கப்போகிறோம் என்பதை அறிந்திருந்தும், உலக பொருட்கள் மீது
இவ்வளவு ஆசை கொண்டு ஒரு ஸ்திரி, அதுவும் ஆன்மீக ஸ்திரி செயல்படமுடியுமா?
சிந்திக்கவேண்டும்.

ஃபாத்திமா அவர்கள் மரிப்பதற்கு முன்னால், தம்முடைய அனைத்து
நற்செயல்களையும் அழித்துவிட்டார். ஃபாத்திமா அவர்கள் ஏழ்மையில்
இருந்தார்கள், இதனால் பொருட்களை அபூ பக்கரிடம் கேட்டார்கள் என்று
சொல்லமுடியாது. ஆரம்ப காலத்தில் எல்லாரும் ஏழ்மையில் இருந்தாலும்,
முஹம்மதுவின் கடைசி காலத்தில் (முக்கியமாக ஃபாத்திமா அவர்கள்) நல்ல செல்வ
செழிப்புடன் வாழ்ந்தார்கள். முஹம்மதுவோடு சேர்ந்து அலி பங்கு பெற்ற
ஒவ்வொரு போரின் முடிவிலும், போரில் பிடிபட்ட அடிமைகளில், செல்வங்களில்
அலிக்கும் பங்கு கிடைத்தது. எனவே, ஃபாத்திமா உணவிற்கு திண்டாடினார்கள்
என்று சொல்ல வாய்ப்பு இல்லை. அப்படி இருந்திருந்தால், அபூ பக்கர்
நிச்சயமாக அவர்களின் குடும்ப பராமரிப்பிற்கு செலவு செய்து
இருந்திருப்பார்கள்.

ஃபாத்திமாவிற்கு பண ஆசை விடவில்லை, இதன் காரணமாக, அபூ பக்கர் எதைச்
சொன்னாலும் அதனை ஏற்கவில்லை, அதாவது அபூ பக்கர் பொய் சொல்கிறார் என்று
எண்ணி, கோபம் கொண்டு வந்துவிட்டார், சில நாட்களில் அதே கோபத்தோடு
மரித்துவிட்டார். இன்று வரையும் ஃபாத்திமாவின் இந்த செயலை நியாயம்
கற்பித்துக்கொண்டு இருக்கிறார்கள் ஷியா பிரிவினர். ஃபாத்திமாவின் மனதை
துக்கப்படுத்திவிட்டார் அபூ பக்கர் என்று அவர் மீது வசை பாடிக்கொண்டு
இருக்கிறார்கள்.

தம்பி, ஒருவருக்கு அனேக நற்குணங்கள் இருக்கும், ஏழைகளுக்கு உணவளிப்பது,
பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதித்து நடந்துக்கொள்வது, பொய் பேசாமல்
இருப்பது, பண ஆசை இல்லாமல் இருப்பது என்பனவைகளைச் சொல்லலாம், இன்னும்
அனேக நற்குணங்கள் உள்ளன. ஆனால், ஃபாத்திமாவின் பண ஆசை சிறிய தவறல்ல.

இஸ்லாம் ஒரு பெண்ணையும் அதுவும் முஹம்மதுவின் மகளையும் திருத்தவில்லை
என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

ஃபாத்திமா இப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதற்காக அவர் மீது முழு
குற்றத்தைச் சுமத்தமுடியாது, முழு குற்றமும் இஸ்லாமுடையது தான்.
இஸ்லாமும், குர்-ஆனும், முஹம்மதுவும் ஏன் ஒரு பெண்ணை மாற்றமுடியவில்லை.
உங்கள் இறைத்தூதருக்கு அன்பாக இருந்த மகளின் நிலையே இப்படியென்றால், 1400
ஆண்டுகள் கழித்து இன்றுள்ள முஸ்லிம்களின் நிலை என்ன?

முஹம்மது ஃபாத்திமா பற்றி கூறும் போது, எனக்குள் ஒரு பகுதி தான்
ஃபாத்திமா என்றுச் சொல்லுவார். ஃபாத்திமாவை துக்கப்படுத்தினால், தன்னையே
துக்கப்படுத்தியதற்கு சமமாகுமாம். முஹம்மதுவை துக்கப்படுத்தினால்
அல்லாஹ்வையே துக்கப்படுத்துவதற்கு சமம் ஆகும். இப்படிப்பட்ட நபர் செய்த
காரியம் மன்னிக்கப்படாத ஒன்று. இவரைச் சொல்லி குற்றமல்ல, இஸ்லாம் இவரை
மாற்றவில்லை என்பது தான் உண்மை. முஹம்மதுவின் 23 ஆண்டுகள் இஸ்லாமை
போதித்தார், ஆனால், அவருடைய மகளால் கூட அதனை முழுவதுமாக
செயல்படுத்தமுடியவில்லை.

5) இஸ்லாம் மனிதர்களை மனதளவில் மாற்றுகிறதா?

உன் இறைத்தூதரின் மகளையே குறைந்த பட்சம் இஸ்லாம் மாற்றவில்லை. அவரை பண
ஆசை பிடித்து ஆட்டிப்படைத்துள்ளது. கோபம் ஒரு நாள் அல்லது வாரம்
இருக்கும், அதிகபட்சம் ஒரு மாதமிருக்கும், ஆனால், பண ஆசையினால், ஆறு
மாதங்கள் கசப்பை மனதில் வைத்திருந்திருக்கிறார் ஃபாத்திமா.

ஒரு முஸ்லிம் அதிக பட்சம் 3 நாட்கள் இன்னொரு முஸ்லிமிடம் பேசாமல் இருக்கலாம்.

மேலே கண்ட ஹதீஸ்களின் படி:

அ) ஒரு ஹராமான காரியத்தை ஃபாத்திமா செய்துள்ளார்கள்

ஆ) முஹம்மது தடுத்த காரியத்தை செய்துள்ளார்கள்

இ) இஸ்லாமில் அனுமதிக்கப்படாததை ஃபாத்திமா செய்துள்ளார்கள்.

ஈ) ஃபாத்திமா முதல் கலிஃபாவின் வார்த்தைகளுக்கு கீழ்படியவில்லை, இதன்
அர்த்தம், அவர் இஸ்லாமுக்கு கீழ்படியவில்லை.

முஹம்மதுவினாலும், இஸ்லாமினாலும் இஸ்லாமின் முதல் சந்ததியாகிய
ஃபாத்திமாவை மாற்ற முடியவில்லை. அற்பமான உலக பொருட்களுக்காக இஸ்லாமை
ஃபாத்திமா புறக்கணித்துள்ளார்கள். இஸ்லாம் உண்மையாக மனிதர்களை
மாற்றுமானால், ஃபாத்திமாவை ஏன் அது மாற்றவில்லை. மனதிலே கசப்பையும்,
வெறுப்பையும் கோபத்தையும் கொண்டு இருந்தார்கள். மரணம் தன்னை சந்திக்கும்
வரை, அபூ பக்கரோடு ஃபாத்திமா பேசவில்லையென்று ஆதாரங்கள் சொல்கின்றன.
எவ்வளவு கீழ்தரமான செயல் பாரு தம்பி, அதுவும் செல்வத்துகாக இப்படி
நடந்துக்கொண்டார்கள்.

முஹம்மதுவை கனப்படுத்துவதுபோல, அவரது பதவியில் அமர்ந்திருந்த அபூ
பக்கரையும் ஃபாத்திமா கனப்படுத்தியிருக்கவேண்டும்.

• தன் தந்தையின் செயல்கள், சொற்கள் ஃபாத்திமாவை மாற்றவில்லை.

• இஸ்லாம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை நெறிமுறை ஃபாத்திமாவை மாற்றவில்லை.

• குர்-ஆனின் 6236 வசனங்களினால் ஃபாத்திமாவை மாற்றமுடியவில்லை.

• முஹம்மதுவின் 23 ஆண்டுகால இஸ்லாமிய ஊழியம் ஃபாத்திமாவை மாற்றவில்லை.

இஸ்லாமிய இறையியல், ஆரம்ப கால முஸ்லிம் சகோதரியை மாற்றவில்லை. இது
இஸ்லாமுக்கு கிடைத்த முதல் தோல்வியாகும். தம்பி, இது ஒரு ஆரம்பம் தான்,
இன்னும் அனேக விவரங்கள் வரவிருக்கின்றன.

முஹம்மது உயிரோடு இருக்கும் போது, அவருக்காக அனைவரும் நடித்தார்கள், அவர்
மரித்தவுடன், நடிப்பை விட்டுவிட்டு, தங்கள் உண்மையான வாழ்வை வாழ
ஆரம்பித்தார்கள்.

மனிதர்களை மனதளவில் நல்லவர்களாக மாற்றும் சக்தி இஸ்லாமுக்கு இல்லை என்பது
இதன் மூலம் விளங்குகிறதா தம்பி?

6) ஃபாத்திமாவும் இயேசுவின் போதனைகளும்

பணம் எல்லோருக்கும் தேவை, ஆனால், பணமே எல்லாம் என்று நினைத்து, இறைவனை
மறந்து வாழ்வதை இயேசு கண்டித்தார். முக்கியமாக, தன் சகோதரனுக்கு தன் மீது
குறை உண்டென்று அறிந்திருந்தும் இறைவனுக்கு காணிக்கை கொடுப்பது வீண்
என்று இயேசு கூறினார். சகோதர அன்பில்லாமல் ஒருவன் காணிக்கை செலுத்தினால்,
அந்த காணிக்கையானது இறைவனுக்கு வேண்டாத ஒன்று எனவே முதலாவது, சகோதரனுடன்
ஒப்புறவாகி, அதன் பிறகு காணிக்கை செலுத்து. அப்படி செய்யாமல்
இருப்பவனுடைய காணிக்கையும், தொழுகையும் இறைவனுக்கு தேவையில்லை என்று
கண்டித்தார்.

இதனை மத்தேயு சுவிசேஷத்தில் நாம் காணலாம்:

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து,
உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,

அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு
உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச்
செலுத்து.(மத்தேயு 5:23-24)

மேற்கண்ட வசனத்தின் படி பார்த்தால், ஃபாத்திமாவின் தொழுகையும்,
காணிக்கைகளும், இதர தான தர்மங்களும், குர்-ஆனை வாசிப்பதும் வீணாகும். ஒரு
கலிஃபாவை குற்றப்படுத்தி, கீழ்படியாமல், ஆறு மாதங்கள் அவரோடு பேசாமல்
இருந்து, மரித்த பிறகும், அபூ பக்கர் வந்து பார்க்கக்கூடாது என்ற
எண்ணத்தோடு ஒருவர் மரிப்பாரானால், அவரை எந்த நிலையில் வைப்பது?
கிறிஸ்தவர்களில் ஒருவர் ஃபாத்திமாவைப்போல நடந்துக் கொண்டால், இயேசுவின்
போதனையின் படி, தேவன் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

மேலும் புதிய ஏற்பாட்டில், பண ஆசைப் பற்றி அனேக எச்சரிக்கைகள்
தரப்பட்டுள்ளது. ஒரு முறை இவைகளைப் படித்துப்பார், ஃபாத்திமா அவர்களின்
செயலை ஒப்பிட்டுப்பார்.

1 தீமோத்தேயு 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும்
கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும்
சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

1 தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர்
அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்
குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எபிரேயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு
இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

லூக்கா 112:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து
எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி
இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

மத்தேயு 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது;
ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப்
பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும்
ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

1 கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும்,
உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

7) முடிவுரை

தம்பி, உன் விருப்பத்தின்படியே, நான் இஸ்லாமின் ஆரம்ப கால கனிகளில் ஒரு
கனியை உனக்கு சுவைக்க கொடுத்தேன். முஹம்மதுவின் அன்பான மகள்
ஃபாத்திமாவின் ஒரு செயலை நாம் இஸ்லாமிய நூல்களிலிருந்து மட்டுமே
பார்த்தோம். முஹம்மது உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, அவர் இல்லாத
போது கூட, நற்குணங்களோடு வாழ்வது தானே, முஹம்மதுவிற்கும் பெருமை, அவரை
அனுப்பிய அல்லாஹ்விற்கும் பெருமை!

ஆனால், இஸ்லாமும், அல்லாஹ்வின் வார்த்தையாகிய குர்-ஆனின் ஆயிரக்கணக்கான
வசனங்களும், முஹம்மதுவின் சுன்னாவும் (சொல்லும் செயலும்) ஃபாத்திமாவை
மனதளவில் மாற்றவில்லை. பண ஆசையை ஃபாத்திமாவின் வாழ்விலிருந்து நீக்க
இஸ்லாம் போதுமானதாக இல்லை.

ஒரு முஸ்லிம் வெளிப்படையாக நற்செயல்களைச் செய்வதற்கு இஸ்லாம்
ஊக்குவிக்கிறது. ஒரு இயந்திரத்தைப்போல ஐந்து வேளை சொல்லியதே சொல்லிச்
சொல்லி தொழுதுவிட்டால், கடமை தீர்ந்தது என்றும், புரியாமல் இருந்தாலும்
அரபியிலேயே தொழுதுக்கொள்ளவேண்டும் என்றும் இஸ்லாமிய கோட்பாடுகள்
சொல்வதினாலும், மக்களுக்கு வேலை சுலபமாகிவிடுகிறது. ஒரு துண்டை
விரித்தோமா 10 நிமிடங்கள் தொழுதோமா, கடமை முடிந்துவிட்டது, ஆனால், ஒரு
கிறிஸ்தவன், தேவனிடம் ஜெபிப்பதற்கு ஆரம்பித்தால், எவ்வளவு நேரம்
பிடிக்குமோ தெரியாது, 5 நிமிடங்கள் ஆகலாம், அல்லது 50 நிமிடங்களும்
ஆகலாம்.

அதே போல, குர்-ஆனை அரபியில் படிக்கிற ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மைகள் நம்
கணக்கில் சேர்க்கப்படுகின்றது. ஒரு இஸ்லாமியர் இப்படி கூறுகிறார்: தாய்
மொழியில் குர்-ஆனை படிப்பது நல்லது என்றாலும், அரபியில் படித்தால் தான்
அதிக நன்மைகள் கிடைக்கும். இரண்டுக்கும் நன்மைகள் உண்டு, ஆனால் தமிழில்
புரிந்துக்கொண்டு படிப்பதை விட, புரியாவிட்டாலும் அரபியில் படிப்பதற்கு
தான் அல்லாஹ் அதிக நன்மைகளைத் தருவானாம், தம்பி இது உனகு வேடிக்கையாக
தெரியவில்லை? அல்லாஹ் எப்படிப்பட்ட இறைவனாக இருக்கிறார் என்று பார்.

இயேசு சொன்னதுபோல, முழு இருதயத்தோடும், பலத்தோடும் இறைவனில் அன்பு
கூறவேண்டும், வெறுமனே கிளிப்பிள்ளை போல சொன்னதே சொல்லிக்கொண்டு
இருந்தால், அது உண்மையான மன மாற்றமாகாது. ஆக, உள்ளான மனமாற்றம் எதையும்
புரிந்து செய்தால் தான் கிட்டும், புரிந்து வேதங்களை படித்தால் தான்
கிட்டும், முழு இருதயத்தோடும், உணர்ந்து அன்பு கூறி செய்தால் தான்
கிட்டும், இஸ்லாமிய கோட்பாடுகள் சொல்வதுபோல செய்தால், இப்படி அனேக
ஆயிரமான ஃபாத்திமாக்கள் தான் இஸ்லாமில் மிஞ்சுவார்கள்.

தம்பி, அடுத்த கடிதத்தில் உனக்கு ஃபாத்திமாவின் கணவரும், நான்காவது
கலிஃபாவாக பதவி வகித்த அலி அவர்கள் பற்றி விவரிக்கிறேன். இஸ்லாமின்
ஆரம்பகால கனிகளில் இன்னொரு கனியை சுவைக்க தயாராகிவிடு.

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

தேதி: 20 ஜூன் 2015

________________________________

உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day4.html

--
Source : http://isakoran.blogspot.in/

0 comments: