அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 9, 2012

தேவப்பிரியாவிற்கு பதில்: ஆதியாகமத்தில் கர்த்தர் குழம்பவில்லை, ஆதியிலிருந்தே தேவப்பிரியா குழம்பியுள்ளார்



தேவப்பிரியாவிற்கு பதில்

ஆதியாகமத்தில் கர்த்தர் குழம்பவில்லை, ஆதியிலிருந்தே தேவப்பிரியா குழம்பியுள்ளார்

முன்னுரை: நான் "மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம் - குர்‍ஆன் முரண்பாடு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதித்து இருந்தேன். அதற்கு தமிழர்நெறி என்ற பெயரில் ஒரு சகோதரர் கீழ்கண்டவாறு பின்னூட்டம் கொடுத்துஇருந்தார்:

"உங்கள் கட்டுரைக்கு போட்டியாக ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்-http://pagadhu.blogspot.in/

என இங்கே கட்டுரை?

பதில் தருவீர்களா?"

இதற்கு நான் படித்துப் பார்த்து பதில் தருவேன் என்று பின்னுட்டமிட்டேன். அவர் கொடுத்த தளத்தில் சென்று பார்த்தால், இது தேவப்பிரயா என்பவரின் தளம் என அறிந்தேன்.

இந்த கட்டுரையில், கீழ்கண்ட தலைப்புகளில் பதிலை அளிக்கவுள்ளேன்.

1) ஆதியாகமத்தில் வரும் மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியா? தேவப்பிரியாவிற்கு பதில்.

2) உமர் இஸ்லாமுக்கு மறுப்புக்கள் எழுதுவது போல, ஏன் தேவப்பிரியாவிற்கும் மறுப்புக்கள் எழுதக்கூடாது?

3) முடிவுரை


1) ஆதியாகமத்தில் வரும் மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியா? தேவப்பிரியாவிற்கு பதில்.

பழைய ஏற்பாட்டு குடும்பத் தலைவர்களின் பொய்கள்

The Patriarchs' Lies

பழைய ஏற்பாட்டு காலத்தில் இரண்டு குடும்பத்தலைவர்கள் தங்கள் மனைவிகளோடு தங்களுக்கு இருக்கும் உறவு குறித்து பொய்களை சொல்லியுள்ளார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூன்று நடந்துள்ளது மற்றும் இவர்கள் வேறு நாட்டிற்கு செல்லும் போது இப்படி பொய் கூறியுள்ளார்கள்.

சிலர் இந்த நிகழ்ச்சிகள் பற்றி கூறும்போது, ஒரே கதை மூன்று வித்தியாசமான பெயர்களில் கூறப்பட்டுள்ளது என்பார்கள் அல்லது இந்த மூன்று நிகழ்ச்சிகள் நமக்கு ஆதியாகமத்திற்கு மூன்று ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது என்றும் கூறுவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிகளை நாம் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், இவைகள் மூன்று தனித்தனியான நிகழ்ச்சிகள் என்று தெரியவரும். இவைகள் பற்றிய வசனங்கள்: ஆதியாகமம் 12:12-20, 20:1-8, மற்றும் 26:1-11 ஆகும்.

நான் வேதத்தை படித்து ஆய்வு செய்த போது, இந்த மூன்று நிகழ்ச்சிகள் தனித்தனியாக நடந்துள்ளது என்பதை என்னால் கவனிக்க முடிந்தது. இதனை எப்படி அறிவது என்று கேட்டால், இந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம். முதலாவது நிகழ்ச்சியில் நாம் பார்க்கும் போது, ஆபிராம் மற்றும் சாராய் என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இவர்களின் உண்மைப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் இவர்களின் பெயர்களை மாற்றவில்லை என்பது தெரியவருகிறது. இதனை நாம் ஆதியாகமம் 17:5ம் வசனத்தில் காணலாம். இரண்டாம் நிகழ்ச்சியை காணும்போது, அவர்கள் இருவரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதை காணலாம், இது ஆதியாகமம் 20ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, இங்கு இவர்களின் பெயர்கள் ஆபிரகாம் என்றும் சாராள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆதியாகமம் 26ம் அதிகாரத்தில் ஈசாக்கு மற்றும் ரெபேக்காள் என்பவர்கள் இந்த மூன்றாம் நிகழ்ச்சியில் வருகிறார்கள். ஆபிரகாமுக்கு சாராள் மூலமாக பிறந்தவர் தான் ஈசாக்கு.

ஆதியாகமம் 12ம் அதிகாரத்தில் நாம் கவனித்தால், ஆபிராமும், சாராயும் பஞ்சத்தின் காரணமாக எகிப்திற்கு பிரயாணப்பட்டுப் போகிறார்கள். இரண்டாம் நிகழ்ச்சியின் போது, அவர்கள் கேரார் என்ற இடத்திற்கு பிரயாணம் செய்கிறார்கள். அந்த இடத்தின் தலைவராக அபிமெலேக் என்பவர் இருந்தார் (பார்வோன் என்பவர் எகிப்தின் தலைவராக இருந்தார்). மூன்றாம் நிகழ்ச்சியிலே பஞ்சம் இருந்ததால், ஈசாக்கும் ரெபேக்காளும் கேரார் என்ற இடத்திற்கு செல்கிறார்கள். ஆனால், "ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று;" என்ற முதல் வசனத்தில் சொல்லப்பட்ட விவரத்தை கவனிக்கவும். அபிமெலேக் என்பவர் அரசராக இருக்கிறார். ஈசாக்கு எகிப்திற்குபோகவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார் (பார்க்க 26:2).

இந்த நிகழ்ச்சிகளில் எப்படி அந்த தலைவர்கள், இந்த குடும்ப நாயகன்களாக இருக்கும் ஆபிரகாமும் மற்றும் ஈசாக்கும் சொன்ன பொய்களை கண்டுபிடித்தார்கள் என்பதை கவனிக்கவும். ஆதியாகமம் 12:7ம் வசனத்தில் "ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்" என்ற வாசகத்தை கவனிக்கவும். இந்த வாதைகளால் தான் ஆபிராம் சொன்ன பொய் பார்வோனுக்கு தெரியவந்தது. இப்போது ஆதியாகமம் 20:3ம் வசனத்தை கவனிக்கவும்: " தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்" மேலும் 20:6ம் வசனத்தில் கவனிக்கவும்: "அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை ." தேவன் அபிமலேக்கின் கனவில் பேசினார். மூன்றாவதாக, ஆதியாகமம் 26:8ம் வசனத்தில் அபிமெலேக் எப்படி, ஈசாக்கின் மனைவி ரெபேக்காள் என்பதை கண்டுபிடித்தார் என்பதை காணலாம். அதாவது ஜன்னல் வழியாக ஈசாக்கு மற்றும் ரெபேக்காளின் விளையாட்டை (கணவன் மனைவியின் விளையாட்டு) கண்டான். எனவே, இந்த நிகழ்ச்சிகள் மூன்றும் மூன்று காலகட்டங்களில் நடந்தவைகள் என்பதை நாம் அறியலாம்.

இந்நிகழ்ச்சிகள் வெறும் சரித்திரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, இவைகளில் தேவன் எப்படி சாராளையும், ரெபெக்காளையும் காத்தார் என்பதைக் காட்டுகிறது, இவர்களின் கணவர்கள் இவர்களை ஆபத்தில் வைத்தலும், தேவன் இவர்களை காத்தார். பைபிள் என்பது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது எப்படியென்றால், பழைய ஏற்பாட்டின் குடும்பத்தலைவர்கள் செய்த பாவங்களையும் பைபிள் சுட்டிக்காட்டியுள்ளது. இதர மார்க்க வேதங்கள் தங்கள் நபிகளின்/தீர்க்கதரிசிகளின் பாவங்களை பைபிள் சுட்டிக்காட்டுவது போல காட்டுகின்றதா? இருந்தபோதிலும், எபிரேயர் 11ம் அதிகாரத்தில் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு போன்றவர்கள் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். (எபிரேயர் 11:8-20). ஆங்கில மூலம்: The Patriarchs' Lies

ஆபிரகாமின் காலத்திலே வாழ்ந்த அதே அபிமெலேக் அரசன் எப்படி ஈசாக்கின் காலத்திலும் இருக்கமுடியும்?

தேவப்பிரியா அவர்கள் மேற்கண்ட கேள்வியை தம்முடைய பதிவில் எழுப்பியுள்ளார்கள். இந்த கேள்விக்கு இரண்டு பதில்களைச் சொல்ல நான் விரும்புகிறேன். முதலாவதாக, ஒரு அரசனுக்கு இருக்கும் பெயர், அவனுக்கு அடுத்துவரும் அரசனாகிய தன் மகனுக்கும்/பேரப்பிள்ளைக்கும் இருக்க வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு இங்கிலாந்து அரச குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இவர்களில் ஜியார்ஜ் 1, ஜியார்ஜ் 2, ஜியார்ஜ் 3 என்ற பெயர்களில் அரசர்கள் அடுத்தடுத்து கால கட்டங்களில் ஆட்சி புரிந்துள்ளார்கள், மற்றும் எலிசபெத் 1, எலிசபெத் 2 என்ற பெயர்களில் அரசிகளும் ஆட்சி புரிந்துள்ளார்கள். தற்காலத்தில் இங்கிலாந்து அரசியாக இருப்பவர் எலிசபெத் 2 என்பவராவார். ஆக, ஒரே பெயர் இருக்கும், ஆனால் எண்களை குறிப்பிட்டு வித்தியாசப்படுத்துவார்கள். நம் தமிழ் நாட்டிலும் ஆட்சி புரிந்தவர்களின் பட்டியலிலும், இப்படி எண்கள் கொடுக்கும் பழக்கம் உள்ளது.

இரண்டாவதாக, சில நேரங்களில் அரசர்களின் சொந்த பெயரை பயன்படுத்தாமல், பட்டப்பெயர்களை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் காலத்தில் எகிப்தில் ஆட்சி செய்த அரசரை "பார்வோன்" என்று பைபிள் குறிப்பிடுகிறது, மேலும், மோசேயின் காலத்திலும் இதே பட்டப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசரின் சொந்தப்பெயர் அல்ல, இது பட்டப்பெயராகும்.

இது போலத்தான், அபிமெலேக் என்ற அரசன் ஆபிரகாம் காலத்திலும், ஈசாக்கின் காலத்திலும் குறிப்பிடப்பட்டு இருந்தால், அது பட்டப்பெயராகவோ அல்லது ஒரே பெயர் கொண்டவராகவோ இருக்கும். நிகழ்ச்சிகள் பற்றிய குழப்பம் கர்த்தருக்கு இல்லை, தேவப்பிரியாவிற்குத் தான்.

2) உமர் இஸ்லாமுக்கு மறுப்புக்கள் எழுதுவது போல, ஏன் தேவப்பிரியாவிற்கும் மறுப்புக்கள் எழுதக்கூடாது?

நான் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் மற்றும் நான் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களுக்கு பதில்கள் எழுத என் நேரத்தை செலவிட விரும்புகிறேன். ஆகையால், இந்துத்துவ சகோதர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க எனக்கு நேரமிருப்பதில்லை, இது முதலாவது காரணம்.

தேவப்பிரியா போன்ற இந்து சகோதரர்கள் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது வெறும் கிறிஸ்தவம் குறித்து கேள்வி கேட்டால் போதும் தன் வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டுள்ளார். இது தவறாகும், அதாவது கிறிஸ்தவர்கள் இந்துத்துவம் பற்றிய கேள்விகள் கேட்டால் அதற்கும் பதில் அளிக்க தயாராக இருக்கவேண்டும். நான் நேரத்தை செலவிட்டு, கொஞ்சம் ஆய்வு செய்து இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை எழுதுவதற்கும், மொழிப்பெயர்ப்பு செய்வதற்கும் நேரத்தை செலவிடுகிறேன். ஆனால், இதே போல நேரத்தை செலவிட்டு இந்துத்துவம் பற்றி கட்டுரைகள் எழுதும் அளவிற்கு இந்துத்துவத்தில் மேட்டர் (விஷயம்) இல்லை என்பது என் கருத்தாகும். அதாவது இஸ்லாமின் படி ஒரு இறைவன் இருக்கிறான் என்றுச் சொல்கிறார்கள், இன்னும் இதர சட்டங்கள் இருக்கின்றன என்றுச் சொல்கிறார்கள், எனவே நேரத்தை ஒதுக்கி ஆய்வு செய்து ஒரு ஆரோக்கியமான இஸ்லாமிய விமர்சனம் செய்வதற்கு இஸ்லாமுக்கு தகுதியுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட நிலை இந்துத்துவத்திற்கு இல்லை, அதாவது எத்தனை கடவுள்கள், எத்தனை சட்டங்கள், எத்தனை மார்க்க புத்தகங்கள் அதாவது வேதங்கள், எல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒரு கிச்சடி போல காட்சியளிக்கும் இந்துத்துவம். எனவே, ஏன் நேரத்தை ஒதுக்கி வீணடிப்பானேன் என்பது என் கருத்து. ஆகையால், நான் இந்து சகோதர்களின் பக்கம் வருவதில்லை.

ஒருவேளை தேவப்பிரியா அவர்கள் கோபம் கொண்டு, "இல்லை இல்லை நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வாருங்கள் நாம் இரு தரப்பிலும் (இந்துத்துவம், கிறிஸ்தவம்) தலைப்புகளை கொடுத்து விவாதிப்போம்" என்று சொல்வாரானால், என்னுடைய நேரத்தில் ஒரு 10% ஒதுக்கி உங்களுடன் எழுத்து விவாதம் புரிய நான் தயார்.

தேவப்பிரியா அவர்கள் நினைவில் வைக்கவேண்டியவை: நாம் முடிவு செய்யும் ஒவ்வொரு தலைப்பும் இரு தரப்பிலும் இருக்கும். உங்கள் வேதங்கள், புராணங்கள், சாமிகள் என்று அனைத்து தலைப்பிலும் சூடான எழுத்து விவாதம் நடைப்பெறும். எனக்கு என் தேவன் மீதும், அவரது வேதம் மீதும் நம்பிக்கை உண்டு, உங்களுக்கு உங்கள் சாமிகள் மீதும், அவர்களின் நடத்தைகள் மீதும், வேதங்களின் மீதும் புராணங்களின் மீதும் நம்பிக்கை உண்டா? தெரியப்படுத்தவும். ஒரு முறை ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு எங்கள் சாமிகளை வேதங்களை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று இஸ்லாமியர்களைப்போல புலம்பக்கூடாது. விவாதம் என்று வந்துவிட்டால், மறைவான உண்மைகள் அனைத்தும் வெளியே வரும், மனம் வருந்தக்கூடாது, புலம்பக்கூடாது. உங்கள் மார்க்கத்தில் உள்ள பலவீனம், பலம் எவைகள் என்பதை சரியாக புரிந்துக்கொண்டு எழுத்து விவாதத்திற்கு வரவேண்டும், எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை, எனவே என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாம்.

(இந்த வரிகள் வரையில் படித்தவராகிய நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் உங்களுக்காக ஒரு குறிப்பு: அடடே… உமரின் திசை இந்து சகோதரர்கள் பக்கம் திரும்பியுள்ளது என்று முஸ்லிம்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம், நான் 10% நேரத்தை மட்டுமே இவர்களுக்காக ஒதுக்க முடிவு செய்துள்ளேன், மீதமுள்ள 90% நேரம் இஸ்லாமியர்களுக்காகத் தான்).

3) முடிவுரை

ஆக, தேவப்பிரியா அவர்களின் பதிலுக்காக உமர் காத்துக்கொண்டு இருக்கின்றான். உங்களின் பதில் வந்தவுடன், நான் சில விவரங்களை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், அதாவது, இந்து மார்க்கத்தில் உங்கள் நம்பிக்கை என்ன? எவைகளை நீங்கள் வேதங்கள் என்றுச் சொல்கிறீர்கள்? விவாதத்தில் எவைகளை பயன்படுத்தவேண்டும், அதாவது எந்த வேதங்களை/புராணங்களை பயன்படுத்தலாம், எவைகளை பயன்படுத்தக்கூடாது? ஏன் இதர புராணங்களை பயன்படுத்தக்கூடாது? போன்ற சில கேள்விகள் எனக்கு உள்ளது. அவைகளுக்கு உங்கள் பதிலை தெரிவித்தால், நான் அதற்கு ஏற்றாற்போல தயாராக முடியும். ஒரு விவாதம் என்றால் அதன் எல்லை என்ன என்பது தெரியவரவேண்டும்? அதற்காகத் தான் இந்த கேள்விகளை நான் கேட்டேன்.

சரி,உங்களின் பின்னூட்டம் இந்த கட்டுரையில் பின்னூட்டமாக பதியுங்கள், அல்லது உங்கள் தளத்தில் பதிலை பதித்து, அதன் தொடுப்பை இங்கே தாருங்கள்.
 
 


0 comments: