அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 7, 2014

என் இஸ்லாமிய தாயாரின் கல்லறையை காணச்சென்ற போது வழியில் ஓட்டுனரிடம் புரிந்த உரையாடல்

என் இஸ்லாமிய தாயாரின் கல்லறையை காணச்சென்ற போது வழியில் ஓட்டுனரிடம்
புரிந்த உரையாடல்


என் இஸ்லாமிய தாய் மரித்து சில நாட்கள் ஆனது. அவரது கல்லறையைக் காண நான்
முதல் முறையாகச் சென்றேன். என்னோடு ராதி என்ற என் நண்பரும் வந்தார்.
நாங்கள் ஒரு காரை வாடகைக்கு வைத்துக்கொண்டுச் சென்றோம். அந்த காரின்
ஓட்டுனர், எங்களோடு அரசியல் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

இந்த கார் ஓட்டுனர் படித்தவர் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஒரு
பள்ளியில் தான் ஒரு சமூக சேவகனாக வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய வருமானம்
போதுமானதாக இல்லாத காரணத்தால் பகுதி நேரமாக இப்படி கார் ஓட்டுனராக வேலை
செய்வதாகவும் அவர் கூறினார்.

நான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு (PhD) படிக்க ஆரம்பித்த
நாளிலிருந்து என் நண்பர் "ராதி" என்னை "டாக்டர்" என்றே அழைப்பார். இவர்
என்னுடைய இன்னொரு நண்பரிடம் வேலை பார்க்கிறார். இவரைப் பற்றி அதிகம்
அறியவேண்டும் என்று இந்த ஓட்டுனர் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்னிடம்
இந்த ஓட்டுனர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். நான்
சுருக்கமாக மட்டும் பதில் அளித்துக்கொண்டு இருந்தேன்.

நான் ஒரு தத்துவயியல் மாணவனாக இருந்தபடியால், இந்த ஓட்டுனர், சாக்ரடீஸ்,
பளாடோ மற்றும் அரிஸ்டாடில் பற்றி தவறாக குறிப்பிடும் போது அவரை சரி
செய்யாமல் என்னால் இருக்கமுடியவில்லை. இவர்களை அந்த ஓட்டுனர், ஒரு சமூக
விஞ்ஞானிகள் (social scientists) என்று குறிப்பிட்டார். நான் அவரிடம்
"இல்லை, இவர்கள் தத்துவஞானிகள் (philosophers)" என்றுச் சொன்னேன்.
இவர்கள் எமில் மற்றும் தர்கீம் போன்றவர்கள் போல இல்லை என்றுச் சொன்னேன்,
இவர்கள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.

நான் "மதத்தை" பாடமாக எடுத்துக்கொண்டு என்னுடைய டாக்டரேட் செய்துக்கொண்டு
இருக்கிறேன் என்பதை அவர் அறிந்தவுடன் அவருக்கு உற்சாகம் மேலோங்கியது.
இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று தெரிவிக்க அவர் அதிக ஆர்வம் கொண்டார்.

நாங்கள் முஸ்லிம் கல்லறையை நோக்கிச் சென்றுக்கொண்டு இருந்தபடியினால்,
நாங்களும் முஸ்லிம்கள் என்று அவர் நினைத்துக்கொண்டார். அவர் 1980களில்,
அஹமத் தீதத் மற்றும் ஜிம்மி ஸ்வாகத் என்பவர்களின் மத்தியில் நடைப்பெற்ற
விவாதத்தை வீடியோவில் பார்த்தார் என்று மகிழ்ச்சியாக என்னிடம் கூறினார்.
நானும் அந்த வீடியோவை கண்டேன் என்றுச் சொன்னேன். நானும் இந்த கார்
ஓட்டுனரும் ஒரே வயதுடையவர்களாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.

அவர் என்னிடம் "உங்களுக்கு சொர்க்கத்தின் மதங்கள் பற்றிய அனைத்து
விவரங்களும் தெரியுமா?" என்று கேட்டார். நான் மதம் பற்றிய படத்தை என்
டாக்டரேட் பட்டப்படிப்பிற்காக தெரிந்தெடுத்து இருப்பதினால், இப்படி
கேட்டார். அவரைப் பொறுத்தவரையில் யூத மதம், கிறிஸ்தவம், மற்றும் இஸ்லாம்
தான் அந்த மூன்று சொர்க்கத்தின் மதங்கள். நான் அவரிடம் "எனக்கு கொஞ்சம்
தெரியும், ஆனால், எல்லாம் தெரியாது" என்றுச் சொன்னேன். மேலும், இந்த
மதங்களை "சொர்க்கத்தின் மதங்கள்" என்றுச் சொல்வதைக் காட்டிலும்,
"ஆபிரகாமிய மதங்கள்" என்றுச் சொல்வது தான் சரியானது என்றுச் சொன்னேன்.
ஏன்னெறால், இந்து மதம் கூட தன்னை "சொர்க்கத்தின் மதம்" என்றே
சொல்லிக்கொள்கிறது என்றுச் சொன்னேன்.

இதனை அவர் மறுத்தார். மேலும், நான் "உண்மையான சொர்க்க மதங்கள் (ஆபிரகாமிய
மதங்கள்) பற்றிச் சொல்கிறேன் என்றுச் சொன்னார்". நான் அவரிடம்
"அப்படியானல் ஆபிரகாமிய மதங்கள் மூன்று அல்ல, அனேகம் உள்ளது. குறைந்த
பட்சம் நான்கு மதங்களை நாம் ஆபிரகாமிய மதங்கள் என்றுச் சொல்லமுடியும்"
என்றுச் சொன்னபோது அவர் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார். "பஹாய் " என்ற ஒரு
மதமும் ஆபிரகாமிய மதமாக நாம் கருதவேண்டும் என்றுச் சொன்னேன்.

இதனையும் அவர் மறுத்தார், மேலும், "பஹாய்" என்பது புதிதாக தோன்றிய
மதமாகும், இதற்கு முந்தையை மதங்கள் (இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மார்க்கம்)
இதனை அங்கீகரிக்கவில்லை என்றுச் சொன்னார். உடனே நான் அவரிடம் இவ்விதமாக
கூறினேன்: "அப்படியானால், கிறிஸ்தவர்கள் கூட இப்படியாகச் சொல்கிறார்கள்,
அதாவது ஆபிரகாமிய மதம் இரண்டு தான், அதாவது சொர்க்கத்தின் மதங்கள் இரண்டு
தான். இஸ்லாம் என்பது புதிதாக தோன்றிய மதம் ஆகும், அதனை கிறிஸ்தமும், யூத
மதமும் அங்கீகரிக்கவில்லை, ஆகையால், இஸ்லாம் என்பது உண்மையான மதம் அல்ல,
அது மனிதன் உண்டாக்கிய மதம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்".
எப்படி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை காண்கிறார்களோ, அதே போலத்தான் நீங்களும்
(ஓட்டுனர்) பஹாய் மதத்தை பார்க்கிறீர்கள் என்றுச் சொன்னேன்.

இந்த ஓட்டுனருக்கு மின்சாரம் தாக்கியதுபோல தூக்கிவாரிப்போட்டது. உடனே
இவர் "இஸ்லாம் ஒரு உண்மையான மதம்" என்பதை நிருபிக்க முயற்சித்தார்.
குர்-ஆன் 4:82ம் வசனத்தை அவர் எடுத்துக்காட்டினார்:

"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ்
அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை
அவர்கள் கண்டிருப்பார்கள்." குர்-ஆன் (4:82).

நான் அவரிடம் "உங்களுடைய ஆதாரம் சரியானதல்ல, ஏனென்றால், கிறிஸ்தவர்கள்
குர்-ஆனை ஒரு இறைவேதம் என்று நம்புவதில்லையே. இப்படியிருக்க,
குர்-ஆனிலிருந்து ஒரு வசனத்தை நீங்கள் மேற்கொள் காட்டுவது
கிறிஸ்தவர்களுக்கு அது ஆதாரபூர்வமற்ற ஒன்றாக இருக்கிறது" என்று கூறினேன்.
மேலும் அவரிடம் "பைபிள் திருத்தப்பட்டது" என்று நீங்கள் நம்புகிறீர்களா
என்று கேட்டேன், உடனே அவர் "ஆம்" என்றுச் சொன்னார்.

உடனே நான் பைபிளிலிருந்து ஒரு இரண்டு வசனங்களை அவருக்கு மேற்கோள்
காட்டினேன்: வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19ம் வசனங்களை நான் அவருக்கு
படித்துக்காட்டினேன்:

22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற
யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே
எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை
தேவன் அவன்மேல் கூட்டுவார்.
22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து
எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த
நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும்,
அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

நான் அவரிடம் "மேற்கண்ட வசனங்களின் படி, பைபிள் திருத்தப்படவில்லை" என்று
ஆதார பூர்வமாக தெரிகின்றது அல்லவா என்று கேட்டேன். உடனே அவர் இதை நான்
ஏற்கமாட்டேன் ஏனென்றால், பைபிள் ஒரு வேதமல்ல என்றுச் சொன்னார். இதற்கு
உடனே நான் அவரிடம் "குர்-ஆனை நம்பாத ஒரு கிறிஸ்தவன் குர்-ஆனில்
சொல்லப்பட்ட வசனத்தை அப்படியே நம்பவேண்டும் என்று நீங்கள் எப்படி
எதிர்ப்பார்க்கலாம் என்று கேள்வி கேட்டேன்". கிறிஸ்தவர்கள் நம்பாத
குர்-ஆனின் வசனம் கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஆதாரமாக, அதிகார்பூர்வமானதாக
ஆகும் என்று கேட்டேன்.

இப்போது இந்த நபர், குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உண்டு என்றுச் சொல்ல
ஆரம்பித்துவிட்டார். உடனே நான் குர்-ஆனில் உள்ள விஞ்ஞான பிழைகளை
எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன். மறுபடியும் அவருக்கு மின்சாரத்தைத்
தொட்டது போல் அதிர்ச்சியாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது.
மறுபடியும் இவர் "குர்-ஆன் பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதை தடை
செய்கின்றது, ஏனென்றால், தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்பின் படி பன்றியின்
இறைச்சியினால் வியாதிகள் வருகின்றது" என்றுச் சொல்ல ஆரம்பித்தார். நான்
அவரிடம் உலகம் முழுவதும், மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில்
பன்றியின் இறைச்சி உட்கொள்ளப்படுகின்றது, ஆனால், இதனால் எந்த ஒரு
பிரச்சனையும் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள் என்றுச் சொன்னேன். ஒரு
வியாதிக்கொண்ட ஆட்டின் இறைச்சியை சாப்பிடும் போது நமக்கு வரும்
வியாதியைப் போன்று, ஒரு வியாதிக்கொண்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடும்
போதும் வியாதி வரும் என்றுச் சொன்னேன். இந்த இடத்தில் இயேசு சொன்ன ஒரு
விஷயத்தை அவருக்கு மேற்கோள் காட்டினேன், மத்தேயு 15:11 "வாய்க்குள்ளே
போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே
மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். "

மேலும் அவர் விட்டுக்கொடுக்காமல், இஸ்லாமின் மேன்மையை எனக்கு
தெரிவிப்பதற்கு, "இஸ்லாம் பொன் நகைகளை அணியவேண்டாம்" என்றுச்
சொல்கின்றது. தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்பின் படி, தங்கம் அணிவதினால்
நோய் வருகிறது, இதனை முன்பே இஸ்லாம் சொல்கிறது என்றுச் சொன்னார். உடனே
நான் இந்த தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்பு பற்றி எனக்கு விவரங்களை
கொடுங்கள், யார் இந்த கண்டுபிடிப்பை செய்தார்? எந்த நாட்டுக்காரர்?
மேலும் இதர விவரங்களைத் தாருங்கள், இப்படிப்பட்ட ஆய்வுகள்
நடைப்பெறவில்லை, இவைகள் பொய்யானவை என்றுச் சொன்னேன், அவரிடம் ஆதாரம்
கேட்டேன். பொய் கண்டுபிடிப்புகள் பற்றி பேசுவதில் முஸ்லிம்கள்
முன்னிலையில் இருப்பார்கள். மேலும் தங்கள் மதம் தான் சிறந்தது என்பதை
நிலை நிறுத்த, அந்த பொய்களை முழு இருதயத்தோடும் நம்புவார்கள், அவைகளை
உண்மை என்றுச் சொல்லி ஆர்வமாக பரப்புவார்கள். மேலும் உலக நாடுகளில்
தங்கள் இஸ்லாமிய நாடுகள் தான் சிறந்தவைகள் என்றும் நம்புவார்கள். தாங்கள்
தான் சிறந்த தலைவர்கள் என்று உறுதியாக நம்புவார்கள். உலகத்தில்
காணப்படும் அதி நவீன கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் அவர்களுக்கே
சொந்தமானது என்றுச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

துரதிஷ்டவசமாக அவர் என்னிடம் "உலகத்தின் பெரும்பான்மையான விஞ்ஞானிகள்
அனைவரும் முஸ்லிம்கள் தான்" என்றுச் சொன்னார். உடனே நான் அவரிடம்
"உலகத்தில் எத்தனை முஸ்லிம்கள் நோபல் பரிசுகளைப் பெற்றார்கள்" என்று
கேட்டேன். மேலும் உலகத்தில் 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள்
இருக்கிறார்கள், இவர்களில் எத்தனை பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது
என்று கேட்டேன்(http://en.wikipedia.org/wiki/List_of_Muslim_Nobel_laureates).
அதே போல இரண்டு கோடி யூதர்கள் மட்டுமே உலகில் இருக்கிறார்கள், இவர்களில்
எத்தனை பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
என்றும் கேட்டேன்
(http://en.wikipedia.org/wiki/List_of_Jewish_Nobel_laureates). அவரிடம்
தெளிவாகச் சொன்னேன், ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டு போட்டி போட நீங்கள்
ஆரம்பித்தால், யூதர்கள் தான் முதலிடம் பெறுவார்கள். எந்த மார்க்கத்தின்
மக்கள் மூலமாக, உலகம் அதிக விஞ்ஞான நன்மைகளை அடைந்துள்ளது என்று நீங்கள்
கணக்கிட்டால், யூதர்கள் தான் போட்டியின்றி ஜெயிப்பார்கள், முஸ்லிம்கள்
அல்ல என்றுச் சொன்னேன்.

இவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. உடனே அவர் "இஸ்லாம் மது அருந்துவதை தடை
செய்துள்ளது" என்றுச் சொல்ல ஆரம்பித்தார். இவரது வார்த்தைகளை கேட்டவுடன்
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், முஹம்மது தன்னை நபியாக
பிரகடனம் செய்துக்கொண்ட பிறகு கூட பல ஆண்டுகள் முஸ்லிம்கள் மதுவை
அருந்திக்கொண்டே இருந்தார்கள் என்ற உண்மையை இவர் அறியாமல் இருக்கிறாரே.
இந்த விஷயத்தைப் பற்றி இவருக்கு குர்-ஆன் வசனத்தை காட்ட விரும்பினேன்.
ஆனால், இவருக்கு இந்த வசனம் இறங்கிய சூழ்நிலையே தெரியவில்லை:

குர்-ஆன் 4:43 - நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று
நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது
தொழுகைக்கு நெருங்காதீர்கள்; …..
மேற்கண்ட வசனம், அடுத்த படியாக வந்த வசனத்தினால்(5:91) இரத்து செய்யப்பட்டது:

குர்-ஆன் 5:91 - நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக்
கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும்
உண்டு பண்ணி
அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து
விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?.

இந்த ஓட்டுனருக்கு குழப்பம் வந்துவிட்டது. உடனே அவர் "நீங்கள் இஸ்லாமில்
நம்பிக்கை கொண்டு இருக்கிறீர்களா?" என்று கேட்டார். நான் "இல்லை, நான்
இஸ்லாமை நம்புவதில்லை" என்று பதில் அளித்தேன். இதைக் கேட்டவுடன்,
அமைதியாக அவர் என்னை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டு இருந்தார், அவரது
காதுகளையும், கண்களையும் அவரால் நம்பமுடியவில்லை. அவரது வாழ்வில் "ஒரு
முஸ்லிமாக இருந்து, இஸ்லாமை புறக்கணிக்கும் நபரை இதுவரை அவர்
சந்திக்கவில்லை" என்பது தெளிவாக புரிந்தது. இது மாத்திரமல்ல, ஒரு படித்த
நபர், அதுவும் மதங்கள் பற்றிய ஆய்வுகளை செய்யும் என்னைப்போல ஒரு நபர்,
இப்படி இஸ்லாமை புறக்கணிப்பார் என்று இவர் இதுவரை கனவில் கூட நினைத்துப்
பார்க்கவில்லை. அவரின் கருத்துப்படி, ஒருவர் இஸ்லாமை ஆழ்ந்து கற்றால்
அவர் இஸ்லாமியராக மாறாமல் இருக்கமாட்டார் என்பதாகும், ஆனால், உண்மை அவரது
எண்ணங்களுக்கு எதிராக இருக்கின்றது.

நாங்கள் சென்றுக்கொண்டு இருக்கும் கல்லறை தோட்டத்தில் தான் என் தாயார்
அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தான்
மரித்தார்கள் என்பதை அவர் அறிந்துக்கொண்டார். மேலும் நாங்கள் முதன்
முதலாக அங்கு சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் அவர்
அறிந்துக்கொண்டார். நாங்கள் கல்லறை தோட்டத்தை அடைந்தோம், காரை விட்டு
இறங்கினோம், அப்போது அவர் என்னிடம் "நீங்கள் அல் ஃபாத்திஹா" ஸூராவை
உங்கள் தாயாருக்காக ஓதுவீர்களா?" என்று கேட்டார் (குர்-ஆனின் முதல்
அத்தியாயம் அல் ஃபாத்திஹா ஆகும்). நான் முன்முறுவலுடன் தலை ஆட்டினேன்.
நான் என் தாயின் கல்லறையிடம் சென்று அஞ்சலி செலுத்தி வந்தேன். என்
நண்பரும், கார் ஓட்டுனரும் என்னிடம் "நீங்கள் உங்கள் வாயை அசைத்து,
உங்கள் தாயாரின் கல்லறையில் அமைதியோடு சில நிமிடங்கள் இருந்தீர்களே!
நீங்கள் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினீர்களா?" என்று கேட்டார்கள்.
நான் அவர்களிடம் "இல்லை, நான் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதவில்லை, நான்
நம்பாத ஒன்றை எப்படி ஓதுவேன்?" என்று சிரித்துக்கொண்டுச் சொன்னேன்.

இந்த கார் ஓட்டுனருக்கு துக்கம் இன்னும் அதிகமானது. அவர் என்னிடம்
"நீங்கள் மரித்தால், உங்களை எங்கு அடக்கம் செய்வார்கள்" என்று கேட்டார்.
நான் அவரிடம் "நான் மரித்தால், என்னை எங்கே புதைப்பார்கள் என்று நான் ஏன்
கவலைப்படவேண்டும்? நான் மரித்துவிட்டபிறகு, என் சடலத்திற்கு என்ன ஆகும்?
அது சில நாட்களிலேயே அழுகிவிடும், அதை எங்கே புதைத்தாலும் எனக்கு
வித்தியாசம் ஒன்றுமில்லை. உங்களுக்கு தெரியுமா? உலக கடைசியில் நம்
ஆத்துமா அல்ல, நம் சரீரம் உயிர்த்தெழும் என்று?" என்று கேட்டேன்.

இப்படியாக, எங்கள் உரையாடல் உயிர்த்தெழுதல், வாழ்வு, மரணம் என்ற
தலைப்புகளை தொட்டுக்கொண்டு தொடர்ந்தது. அவரிடம் நான் "இஸ்லாம் எனக்கு
இரட்சிப்பைத் தராது" என்று கூறினேன். அதாவது இஸ்லாமின் படி, அந்த
நியாயத்தீர்ப்பு நாளிலே, ஒரு தராசில் எனது அனைத்து நன்மைகளை ஒரு தட்டில்
வைத்து, இன்னொரு தட்டில் என்னுடைய தீய செயல்களை வைத்து, சரி பார்த்து,
அதன் பிறகு எனது நித்தியம் நிர்ணயிக்கபடும் என்ற கோட்பாட்டை நான்
நம்பமுடியாது என்றுச் சொன்னேன். நித்திய வாழ்வை நிர்ணயிக்கும் இந்த
வகையான வழிமுறை சரியானது அல்ல என்றும் சொன்னேன்.

நான் அவரிடம் "உங்களுக்கு புகழ்பெற்ற பெல்லி டான்சர் பெண்ணைத் தெரியுமா?
(இடுப்பை ஆட்டி நடனம் புரிபவர்) என்று கேட்டேன்". இஸ்லாமில் இந்த நடனம்
தடை செய்யப்பட்ட ஒன்றாகும், ஏனென்றால், இந்த நடனத்தை பார்ப்பவர்கள்
பாவத்தில் விழுவார்கள். இந்த நடனப்பெண்மணி 11 மாதங்கள் இப்படிப்பட்ட
நடனத்தை ஆடிக்கொண்டு இருந்துவிட்டு, ரமளான் மாதம் வந்தவுடன், ஒரு
முக்காட்டை போட்டுக்கொண்டு, தினமும் ஐந்து வேளை தொழுகை செய்து, மாதம்
முழுவதும் நோன்பு இருந்து, தான தர்மங்களை அதிகமாக செய்து, மக்காவிற்கும்
புனிதப்பயணம் செய்து வருகிறார். இதனை ஒவ்வொரு ஆண்டும் செய்கிறார்.
இப்படிப்பட்ட பெண் சொர்க்கத்திற்குச் செல்வாளா? என்று அவரிடம் கேட்டேன்.

இந்த ஓட்டுனர், இந்த இடுப்பு நடனக்காரியை நினைத்து சிரித்துவிட்டு,
நிச்சயமாக இந்தப் பெண் சொர்க்கம் செல்லமாட்டாள் என்றுச் சொன்னார். நான்
உடனே அவரிடம் திருப்பிக்கேட்டேன், "அந்தப் பெண் இஸ்லாம் சொல்வதைத் தானே
செய்கிறாள், தன்னுடைய நல்ல காரியங்களை அதிகப்படுத்திக்கொள்கிறாள்,
ஏனென்றால், நியாயத்தீர்ப்பு நாளிலே தன்னுடைய தீய செயல்களைக் காட்டிலும்,
நல்ல செயல்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவள் இப்படியெல்லாம்
செய்கிறாள் என்றுச் சொன்னேன். உடனே அவர், இல்லை இந்தப் பெண் செய்வது
தவறானது, அவள் சொர்க்கம் செல்லமாட்டாள், நரகம் தான் செல்வாள் என்றுச்
அடித்துச் சொன்னார்.

நான் அவரிடம், "நீங்கள் இந்த வாழ்வை விட, அடுத்துவரும் வாழ்வை
முக்கியப்படுத்துபவராக இருந்தால், இஸ்லாமை விட கிறிஸ்தவம் தான்
உண்மையானது, சிறந்தது" என்றுச் சொன்னேன். அவர் என்னிடம் "இது எப்படி?
என்று கேட்டார். நான் பதில் சொல்லும் வண்ணமாக, ஆதாம் பற்றிய ஒரு கேள்வியை
அவரிடம் கேட்டேன்.: "ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பு, அவர் பரதேசில்
(ஏதோனில்) இருக்கும்போது மரிக்கமுடியுமா?" என்று கேட்டேன். அவர் "இல்லை,
ஆதாம் மரிக்கமுடியாது, அவர் மரணமில்லாதவர்" என்றுச் சொன்னார்.
அதன்பிறகு நான் அவரிடம் "அப்படியானால், ஆதாம் பாவம் செய்து, இறைவனுக்கு
கீழ்படியாமல் போய், அந்த மரத்தின் கனியை புசித்து, பூமிக்கு
தள்ளப்பட்டுவிட்ட பிறகு, மரணமில்லாதவராக வாழமுடியுமா?" என்று கேட்டேன்.
இதற்கு அவர் "இல்லை, இப்போது ஆதாம் நிரந்தரமாக மரணமில்லாதவராக
வாழமுடியாது, அவர் மரணித்தே ஆகவேண்டும்" என்று பதில் சொன்னார். இப்போது
நான் அவரிடம், "ஆக, ஆதாம் இறைவனுக்கு கீழ்படியாமல் போனதினால், மூன்று வித
நஷ்டத்தை பெற்றார், முதலாவது அவர் பரதேசிலிருந்து வெளியே அனுப்பப்பட்டர்,
இரண்டாவதாக, இறைவனின் ஐக்கியத்தை இழந்தார், மூன்றாவதாக, தன் பாவத்தினால்,
"மரணம்" என்ற ஒன்றையும் பெற்றார்" என்றுச் சொன்னேன். அதாவது மரணம் என்ற
தண்டனையை ஆதாம் தனது கீழ்படியாமையினால் பெற்றார் என்றேன். இதற்கு அவர்
எந்த ஒரு பதிலையும் தரவில்லை.

நான் என் கேள்விகளை தொடர்ந்தேன்: "ஒருவேளை ஆதாம் மரணமில்லாத தன்மையோடு
பரதேசில் இருந்த போது, நாம் அவருக்கு பிறந்து இருந்திருந்தால், நாமும்
அவரைப்போல மரணமில்லாத தன்மையுடன் மகிழ்ச்சியாக பரதேசில் இருந்திருப்போம்
அல்லவா?" என்று கேட்டேன். மேலும், இப்போது ஆதாமுக்கு நாம் பூமியில்
பிறந்தபடியால், அவரைப்போல நாமும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் என்ற
நிலையில் இருக்கிறோம் அல்லவா? என்றும் கேட்டேன். அவர் பாவம் செய்து,
மரணத்தை தண்டனையாக பெற்ற பிறகு நாம் அவருக்கு பிறந்தபடியினால், நமக்கும்
"மரணம்" என்ற தண்டனை கிடைத்துள்ளது அல்லவா? என்று கேட்டேன். ஆதாமின்
மரணத்தை நாம் பெற்றுக்கொண்டோம், அதே போல தண்டனையையும் பெற்றுக்கொண்டோம்.
இறைவன் பரிசுத்தமுள்ள நீதிபதியாக இருப்பதினால், உலகில் எந்த ஒரு மனிதனும்
"நான் பரிசுத்தமான மனிதன், பாவம் செய்யாதவன்" என்றுச் சொல்லமுடியாது,
முஹம்மதுவும் ஆதாம் மூலம் வந்த பாவத்தையும், தண்டனையையும் பெற்று
இருப்பதினால், அவரும் இப்படியாகச் சொல்லமுடியாது.

முஹம்மதுவின் பாவங்கள் பற்றி நான் ஆழமாக அவரோடு உரையாட விரும்பவில்லை.
அதற்கு பதிலாக, முஹம்மதுவின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் குர்-ஆனில்
சொன்ன வசனத்தை அவருக்கு மேற்கோள் காட்ட விரும்பினேன். ஒரு பாவியான
மனிதனைத் தான் மன்னிக்கமுடியும், ஒரு பாவமும் செய்யாதவர்களை எப்படி
மன்னிப்பது? குர்-ஆனிலிருந்து வசனங்கள் 94:2-3 ஐ அவருக்கு எடுத்துக்
காட்டினேன்: குர்-ஆன் 94:2-3 - மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை
இறக்கினோம். அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
இந்த கார் ஓட்டுனரில் மனதிலும், என் நண்பரின் மனதிலும் அமைதியாக இருந்த
வெடிகுண்டு வெடிக்கும் சமயம் வந்துவிட்டது என்பதை நான்
அறிந்துக்கொண்டேன். அவர்களுக்கு ரோமர் 5:12ம் வசனத்தை மேற்கோள்
காட்டினேன்: இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும்
உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால்,
மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

மேலும் அவரிடம் "ஒரு மனிதனின் நீதியுள்ள கீழ்படிதலின் காரணமாக, நாம்
அனைவரும் மறுபடியும் நித்திய வாழ்வை திரும்பபெறமுடியுமா?" என்று
கேட்டேன்.
அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவர் குழப்பத்தில் இருந்தார்.
மேலும், அவர் அமைதியாக தலையை ஆட்டினார். அதன் பிறகு, "யார் ஆதாமைப் போல்
இருப்பவர்?" என்று கேட்டேன். உங்களுடைய குர்-ஆன் 3:59 இப்படியாகச்
சொல்கிறது என்று அவருக்கு எடுத்துக்காட்டினேன்: " அல்லாஹ்விடத்தில்
நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை
மண்ணிலிருந்து படைத்துப் பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்; அவர்
(மனிதர்) ஆகிவிட்டார்.".

இயேசு ஒரு போதும் பாவம் செய்யவில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
இயேசு பாவம் செய்யாதவர் என்று இஸ்லாம் போதிக்கிறது என்பதை அறிவீர்களா?
என்று கேட்டேன்.

இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே நாம் செல்லவேண்டிய இடத்தை
அடைந்துவிட்டோம். நான் என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துகொள்ளும்வரை
இன்னும் சில நிமிடங்கள் நாங்கள் காரிலேயே உட்கார்ந்தோம். கடைசியாக அவர்
என்னிடம் "இன்று உங்களை நான் விடப்போவதில்லை, மட்டுமல்ல, நான் இன்று
வேலையும் செய்யப்போவதில்லை. நாம் ஒரு காஃபி கடைக்குச் செல்வோமா? மேலும்
இதுவரை நீங்கள் சொன்ன விவரங்களை நான் ஜீரணித்துக்கொள்வதற்காக, நான்
சிறிது புகைபிடித்துக் கொள்கிறேன் (Smoke Water Pipe)" என்றார்.
நாங்கள் ஒரு காஃபி கடைக்குச் சென்றோம். அங்கு துருக்கி காஃபியை
குடித்தோம். மேலும் என் நண்பர் ராதியும், ஓட்டுனரும் புகைபிடித்தார்கள்.
அவர்களுக்கு இந்த வகையான புகைப்பிடித்தல் தேவை என்று அவர்கள்
கருதினார்கள், ஏனென்றால், இதுவரை செய்த சூடுபறக்கும் உரையாடல்களினால்
உண்டான சூட்டை தணிக்க இவர்கள் புகைப்பிடித்தார்கள்(Water Pipe). நான்
சொன்ன விவரங்களை அவர்கள் ஜீரணித்துவிட்டார்கள் என்று நினைக்கும் போது,
திடீரென்று இஸ்லாமிய பாங்கு சொல்லும் சப்தம் கேட்டது, அதாவது இஸ்லாமிய
தொழுகைக்கான நேரம் வந்த உடன் அப்பகுதியில் இருக்கும் ஒரு மசூதியிலிருந்து
தொழுகைக்கு அழைக்கும் சப்தம் காற்றில் பறந்துவந்து எங்களை எட்டியது.
நான் அவ்விருவரையும் பார்த்து, "நீங்கள் இப்போது தொழப்போவதில்லையா?"
என்று கேட்டேன். அவர்கள் முகத்தில் காணப்பட்ட அந்த வெட்க உணர்வு, அவர்கள்
தொழப்போவதில்லை என்பதை எனக்கு மௌனமாக சொல்லிவிட்டது. கடைசியாக, அவர்களை
சிந்திக்கும் படி ஒரு கேள்வியை கேட்டேன், "ஆக, நீங்கள் இப்போது அந்த
இடுப்பு நடன நிகழ்ச்சியில் (Belly Dance Party)
கலந்துக்கொள்ளப்போகிறீர்கள்" என்று நினைக்கிறேன். உங்களால் முடிந்த போது
சில நல்ல காரியங்களைச் செய்து, நன்மைகளை சேர்த்துக்கொண்டு சொர்க்கத்தை
அடைந்துவிடுவோம் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டேன்.

நான் அவர்களிடம் "ஒரு முஸ்லிமின் நம்பிக்கை என்பது இருட்டில்
குதிப்பதற்கு சமமாகும், எனவே இஸ்லாமை விட்டுவிட்டு மிகவும் பாதுகாப்பான
உயரத்திலிருந்து குதிப்பதை தெரிவு செய்துக்கொள்ளுங்கள்" என்றுச்
சொன்னேன்.

இதனை நான் எங்கள் உரையாடலில் கடைசியாகச் சொன்னேன் என்று நினைக்கிறேன்.
அதாவது நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கைக்கொண்டு
இருப்பதும், மேலும் தராசின் இரண்டு தட்டுகளில் வைக்கப்பட்ட நல்ல தீய
செயல்களின் அளவுகளின் மீது நம்பிக்கைக்கொண்டு இருப்பதையும் விட்டுவிட்டு,
இவ்வுலகில் வாழும்போதே ஒரு நிச்சயத்தை அடையும் மார்க்கத்தை
பின்பற்றுங்கள் என்றேன். அவர்களிடம் நான் "நீங்கள் நீதிபரராகிய இரண்டாம்
ஆதாம் (இயேசுக் கிறிஸ்து) பற்றி சிறிது ஆய்வு செய்யுங்கள்" என்றுச்
சொன்னேன். நீங்கள் இழந்துப்போன நித்திய வாழ்வை கொடுக்கும் இயேசுக்
கிறிஸ்துவை நம்புங்கள். இவர் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த
பிளவை நீக்கி இருவரையும் ஒற்றுமையாக்கியுள்ளார் என்றும் சொன்னேன்.

நான் இதுவரை என்ன செய்தேன் என்றுச் சொன்னால், அசையாமல் ஒரே இடத்தில்
தேங்கியிருந்த தண்ணீராகிய அவரது மனதில் ஒரு சிறிய கல்லை போட்டேன். அது
அவரை சிந்திக்கவைக்கும். அவர் எங்கு மற்றும் ஏன் பிறந்தார்? அவருக்கு
இதுவரை போதிக்கப்பட்டவைகள் எவைகள்? என்பவைகள் பற்றி அவர் இனி ஆய்வு
செய்வார் என்று நம்புகிறேன். இது தான் அவருக்கு என்னால் செய்யமுடிந்த
உதவி. அவர் நம்பிக்கொண்டு இருப்பவைகள் உண்மை தானா என்பதை அவர் இனி ஆய்வு
செய்து முடிவு எடுப்பார். நான் ஒரு கிறிஸ்தவன் என்று நேரடியாகச் சொல்லி
அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின்
மூலமாக கிடைக்கும் நீதியையும், நம்பிக்கையையும் அவர்களுக்குச்
சொல்லியுள்ளேன். அவர்களோடு நான் உரையாடும் போது, திரித்துவம் பற்றியும்,
தேவக்குமாரன் பற்றியும், பைபிளின் நம்பகத்தன்மைப் பற்றியும் முஸ்லிம்கள்
பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில்களைத் தரவில்லை.

அந்த கார் ஓட்டுனர் கடந்துச் சென்றுவிட்டார். போகும் போது நான் இப்போது
வீட்டிற்குச் செல்கிறேன், இதுவரை கேட்ட விவரங்களின் படி என் தலை பாரமாக
இருக்கிறது என்றுச் சொன்னார். நான் காரின் வாடகைப் பணத்தை கொடுக்க
முன்வரும் போது, அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு பதிலாக, நான்
இதுவரை கேட்ட விவரங்களுக்காக நானே உங்களுக்கு பணம் தரவேண்டும் என்றுச்
சொன்னார். இருந்தபோதிலும், நான் இரண்டு மடங்கு அவருக்கு வாடகை
கொடுத்தேன், அவர் மறுத்த போதும் கட்டாயமாக அவருக்கு கொடுத்தேன். என்னோடு
அவர் உரையாடியதால், அந்த நாளின் மீதமுள்ள வேலையைச் செய்யாமல், வருமானத்தை
நஷ்டப்படுத்தியதற்காகவும், நாங்கள் பேசிய விவரங்களை தியானிக்கவும்,
இரண்டு மடங்கு வாடகையைக் கொடுத்தேன்.

பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலுக்காக அவருக்கு நன்றி
செலுத்துக்கிறேன். என் தாயை பிரிந்த வேதனையில், அவரது கல்லறையைக்
காணச்சென்ற அந்த சமயத்தில் இப்படி நான் ஒருவருக்கு சுவிசேஷம் சொல்வேன்
என்று நினைத்தும் பார்க்கவில்லை. என் வேதனையைப் பற்றியே
சிந்தித்துக்கொண்டு இருந்த என்னை ஒரு புதிய அனுபவத்தில் கர்த்தர்
நடத்திச் சென்றார். இதனை நான் கற்பனையும் செய்யமுடியாது. இதனை நான்
திட்டமிடவுமில்லை. நாம் சக்தியற்று சோர்ந்துப்போய் இருக்கும் சமயத்திலும்
கர்த்தர் நம்மை தம்முடைய சாட்சியாக மாற்றிக் கொள்கிறார்.

நீங்கள் தயவு செய்து, அந்த கார் ஓட்டுனருக்காகவும், என் நண்பர்
ராதிக்காகவும் ஜெபியுங்கள். அந்த கார் ஒட்டுனர் என்னை விட்டு கடந்துச்
சென்றுவிட்ட பிறகு தான் எனக்கு ஞாபகம் வந்தது, அதாவது நான் அவரின் பெயரை
கேட்கவே இல்லை. நான்கு மணி நேரம் நாங்கள் பேசினோம், ஆனால் பெயரை நான்
கேட்கவில்லை. கர்த்தருக்கு அவரது பெயர் தெரியும். எனக்கு கொடுக்கப்பட்ட
வேலையை நான் செய்தேன் அவ்வளவு தான். யாருக்கு நற்செய்தி சென்றடையவேண்டுமோ
அவர்களுக்கு நான் அறிவித்துவிட்டேன். இனி மீதமுள்ள விவரங்கள் கர்த்தரின்
கையில் உள்ளது. என்னை அனுப்பிய கர்த்தர் அவர்களை சந்தித்து, அவர்கள்
மனதில் நற்செய்தியின் கிரியைச் செய்து, இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின்
மூலம் கிடைக்கும் இரட்சிப்பை அவர்களுக்கு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

ரோமர் 5:19 - அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர்
பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர்
நீதிமான்களாக்கப்படுவார்கள்.

மூலம்: http://exmuslim.com/taxi-driver/#.Uvz_-vmSxPI



sOURCE :
http://isakoran.blogspot.in/2014/02/blog-post.html